ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை
காதலில் அனுபவம் உள்ளவர்களா, காதலில் தோல்வியுற்றவர்களா இல்ல காதலில் விழப்போறவர்களா அனைவரும் இந்த "ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை" என்ற நாவலை வாசிக்கலாம் என முன்னுரையை முடித்து கதையைத் தொடக்கியுள்ளார் எஸ்.ரா. அவர் எழுதிய மற்ற நாவல்களில் இது சற்று வித்தியாசம் என அவரே குறிப்பிட்டுள்ளார். எஸ்.ரா வின் சிறுகதை படித்து உள்ளேன் அதில் அவளது வீடு என்னோட பாவோரிட். ஒரு நல்ல காதல் கதை படிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை. அது இந்த நாவலின் வழியாக நிறைவேறியது.
"பேருந்தின் கண்ணாடி ஜன்னலையும் மீறி குளிரடித்தது" என்ற கதை முதலில் ஆரம்பிக்கும் இதை வாசிக்கும் போது கவித்துவமாகவும், அழகாவும் இருக்கும். காதல் கதை என்பதால் எழுத்து நடையைக் கவித்துவமாகவே எழுதியுள்ளார். தன் கோடைக்கால விடுமுறை நாளில் முளைத்த காதலை சந்திக்க பல காலம் கழித்து சித்தாபுரா எனும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமத்துக்குச் செல்கிறான் சுப்ரமணி. அவன் செல்லும் போது தன் கோடைக்கால விடுமுறை நாட்களின் அனுபவங்களை அசைபோட்டு கொண்டு போகிறான்.
பிளஷ்பக் போன்ற கதையைக் கடத்தி செல்கிறார். ஒரு அத்தியாயம் நிகழ்காலத்தில் அடுத்த அத்தியாயம் கடிந்த காலத்தில் என வித்தியாசமான பாணியில் எழுதியுள்ளார். காதலுக்கு இயற்கை எவ்வளவு உதவுகிறது. நிகழ் காலத்தில் நடக்கும் கதை குளிர்காலமும் அதே கடந்த காலத்தில் நடக்கும் கதை கோடைக்காலமும் போல அமைத்திருப்பது சிறப்பு. படித்து முடித்தவுடன் இதில் வரும் சில்வியா நம் மனதில் ஆட்கொள்கிறாள் என்றே சொல்லலாம்.
கோடைக்கால விடுமுறை நம் அனைவரும் ஒருமுறையாவது அவர் அவர்களின் தாத்தா பாட்டி வீட்டிற்குச் சென்று இருப்போம். அப்போது ஏற்பட்ட நட்பு, விளையாடிய விளையாட்டு, பார்த்தப் படம், சில்லுனு குடித்த ஜூஸ், ஐஸ் கிரீம் என அனைத்தும் நம் மனதில் புதைந்திருக்கும். அதை அலுங்காமல் தோண்டி எடுத்து நம் கண்முன்னே காட்டி உள்ளார் எஸ்.ரா. வாசிப்பதற்கு மிக எளிமையாகவே உள்ளது.
"எஸ்.ரா வை நம்பி படிக்கலாம் ஏமாற்றமாட்டார் என்பதற்கு இது ஒரு சான்று "



